சென்னை: ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக): ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள். வைகோ (மதிமுக): முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அமைந்துள்ளது.
கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. வருகிற காலங்களில் பாதுகாப்பு அரணாக தொடர்ந்து செயல்படும். இதுபோல் என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), வி.ஜி.சந்தோசம், எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்) உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.