பெரியகுளம் : நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் பகுதியில் உள்ள வட்டக்கானல், வெள்ளக்கெவி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.
தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் அருவிக்கு வந்து செல்வர். விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் களைகட்டும்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 1ம் தேதி கனமழை பெய்ததால், 2ம் தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அருவிக்கு நீர்வரத்து சீரானது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு, அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.