பஸ்தி: போதையில் கணவர் தகராறு செய்தால் அவரை தடியால் அடியுங்கள் என்று உத்தரபிரதேச பெண்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் அறிவுரை வழங்கியுள்ளார். உத்தரபிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், பஸ்தியில் நடந்த மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘வரும் அக். 2ம் தேதி ஆளுநர் மாளிகையில் மதுவிலக்கு பிரசாரம் ெதாடங்கப்படும். பால், காய்கறி, கல்வி போன்றவற்றிற்காக பணம் இல்லை என்கின்றனர். ஆனால் மாதம் முழுவதும் மது அருந்த அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கணவன் போதையில் உங்களை தாக்கினால், அவர்களை தடியால் திருப்பி அடிக்க வேண்டும்.
மதுபான ஆலைகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். போலீஸ் உதவியுடன் அந்த மதுபான ஆலைகளை இடித்து தள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் மதுவிலக்கிற்கான பிரசாரம் வலுப்பெறும். மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால், முதலில் மதுவிலக்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மது, குட்கா போன்றவற்றை தடுக்காவிட்டால் ஆரோக்கியமான சமுதாயம் இருக்காது’ என்று கூறினார்.