கிருஷ்ணகிரி: கடும் வறட்சி மற்றும் மணல் காற்றால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக போதிய மழை பெய்யாத நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் மா விவசாயிகள் டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி மா மரங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். தற்போது மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாங்கூழ் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் மாங்காய்களுக்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாக நிர்ணயம் செய்திட அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விவசாயிகளை காக்கும் விதமாக அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும் மா விவசாயிகள் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.