மதுரை: வறட்சியால் பாதித்த 5 ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி தென்பகுதி தரிசு நில விவசாயிகள் சங்க பொதுச்சயலாளர் முருகேசன், கடந்த 2017ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘சிறு விவசாயிகளின் நலன் கருதி எடுக்கப்படும் அரசின் முடிவு கொள்கைரீதியானது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் தருவது தொடர்பாக அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு பலன்கள் போய் சேரவேண்டும். கடன் தள்ளுபடி உள்ளிட்ட வழிகளில் நிவாரணம் இருக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒரே மாதிரியான அளவிற்கு நிலங்களை வைத்திருக்க முடியாது.
இதுதொடர்பாக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசின் கருத்தை, நீதிமன்றத்தின் மூலம் பார்க்க முடியாது. மானியம் வழங்குவதும் அரசின் கொள்கை முடிவே. இதில், அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் இது 2017ல் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதால் முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.