திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். அப்பகுதி திமுக பிரதிநிதி. இவர், ஆர்.வி.இன்ஜினியரிங் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் காமராஜ் (34). பட்டதாரியான இவர், தனது தந்தையுடன் இணைந்து அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தங்களின் நிறுவனத்துக்கு வந்த காமராஜ், அங்கிருந்த ஊழியர் அன்புவிடம், அன்றைய பணிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த 6 பேர், காமராஜை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த காமராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், ஆர்.வி இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் எண்ணூரில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான மாவட்ட கிளை நூலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர சென்னை மாநகராட்சியின் பல்வேறு கட்டுமான பணி ஒப்பந்தங்களை திமுக பிரதிநிதி விவேகானந்தனும், அவரது மகன் காமராஜும் எடுத்து நடத்தி வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் பணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பெருந்தொகையை மாமூலாக கேட்டு, காமராஜிடம் செல்போனில் ஒரு மர்ம கும்பல் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு மாமூல் தரமுடியாது என காமராஜ் மறுத்ததால், சம்பந்தப்பட்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இக்கொலையில் தற்போது கடலூர் மத்திய சிறையில் இருக்கும் எண்ணூர், பர்மா நகரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரின் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் என மொத்தம் 15 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து, எண்ணூர் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.