Thursday, May 23, 2024
Home » திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு வழக்கில் சிறுவன் உட்பட 4 பேர் கைது

by Karthik Yash

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர மன்ற 16வது வார்டு உறுப்பினராக இருப்பவர் இந்திரா பரசுராமன். இவரது மகன் கலைவாணன்(32). திமுக பிரமுகர். திருவள்ளூர் நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கலைவாணன் திருவள்ளூர் நகரில் சாமியானா பந்தல், சேர், டேபிள், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மெட் ஜோன் என்ற மருந்துகடையும் நடத்தி வருகிறார்.
இவரது உறவினரான லோகநாதன் மகன் சரவணன்(21) கஞ்சா விற்பனை செய்து வந்த ஆகாஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆகாஷ் போன்றவர்களுடன் சேரக்கூடாது என்று கலைவாணன் தனது கடைகளில் சரவணனை வேலைக்கு சேர்த்து பராமரித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆகாஷ் அடிக்கடி கடைக்கு வந்து சரவணனை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, கலைவாணன் ஆகாஷை எச்சரித்து அனுப்பியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே தான் நடத்தி வரும் மெட்ஜோன் மருந்தகத்திற்கு கலைவாணன் வந்துள்ளார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் மருந்தகத்திற்குள் புகுந்து கலைவாணனை தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கலைவாணனை மீட்டு, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் திருவள்ளூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் ஆகாஷ்(21), ராஜசேகர் மகன் சந்தோஷ்(22) அய்யாதுரை மகன் சந்துரு (எ) சந்திரசேகர்(36), மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் ஈடுபட்டது என தெரியவந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப் – இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் நாகை மாவட்டம் வேளாங்கன்னியில் பதுங்கியிருந்த 4 பேரையும் கைது செய்தனர். இதில் ஆகாஷ்(21), சந்தோஷ்(22) சந்துரு (எ) சந்திரசேகர்(36) ஆகிய 3 பேரையும் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 18 வயது சிறுவனை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை கெல்லீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

17 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi