சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரை தவிர தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. நீட் தோ்வை தடை செய்யாத ஒன்றிய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் இன்று உண்ணாவிரதம் நடக்கவுள்ள நிலையில் மதுரையில் மாற்றப்பட்டுள்ளது. அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நாளை நடைபெற இருந்த திமுக உண்ணாவிரதம் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால், ஜனநாயகத்தைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி அறிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த 24 மாணவர்களுக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.