சென்னை: திமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வரும் த.இளைய அருணா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவரது மற்றொரு அறிவிப்பில், பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் ராஜேந்திரன், தனது உடல்நலக்குறைவு காரணமாக, தான் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டுள்ளார். இதனால் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற வீ.ஜெகதீசன் பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.