சென்னை : தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி இயக்குனர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், Good morning friends என்று மகிழ்ச்சியாக ஆரம்பிக்க இயலா இன்றைய விடியல்….பிறப்பு என்பது இரு உயிர்களால் இன்னொன்றை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது.இறப்பு எபது அவ்வுயிர் இன்னபிற உயிர்களுக்கு உதவி,பிரிகையில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு உலகமே அன்வ்வுயிருக்காக கண்ணீரோடு வழியனுப்புவதன் மூலம் இம்மானுடம் மேன்மையுற விட்டுச் சென்ற செய்தி!
மறைந்த விஜயகாந்த் அவர்களின் மறைவில் ‘மனிதம்’ கற்று கொள்வோம்.இதைமட்டுமே நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்நேரத்தில் இச்சோகத்தில் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அது மனைவியை மீறி கணவனையே சுமக்கும் தாயாகி, நீண்ட போராட்டத்திற்கு பின் இறக்கி வைத்திருக்கும் ‘பெண் விஜயகாந்த்’ திருமதி பிரேமலதா அவர்கள்! தீவு: நாலு பக்கம் தண்ணீர்.இன்றைய தீவுத்திடல் கண்ணீரோடு-செல்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் இயக்குன மிஷ்கின் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில், தமிழர்களின் மனதில் ஒரு பெரும் ஆலமரமாக ஓங்கி வளர்ந்து நிழற் கொடுத்து, கனி கொடுத்து, அருள் கொடுத்து, அன்பு கொடுத்து, இன்று இந்த மண்ணிலே சாய்ந்து விட்டீர்களே ஐயா!
நீங்கள் சாய்ந்தாலும் இந்தத் தமிழ் பூமி தவம் என உங்களைச் சுமக்கும். உங்கள் வேர்கள் எங்கள் இதயங்களில் பயணிக்கும், நீங்கள் விட்டுச் சென்ற விழுதுகள் இந்த பூமியில் மரங்களாய் வளரும்.
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் அங்கே உங்களுக்காக ஒரு மாளிகை திறந்திருக்கும்…
ஓய்வெடுங்கள் ஐயா! என்றும் சிரித்த உங்கள் கன்னங்களில் நான் முத்தமிடுகிறேன்.
அன்புடன் மிஷ்கின்,” எனத் தெரிவித்துள்ளார்.