தர்மபுரி, ஜூலை 29: தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தேதி அறிவிக்காமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், நேற்று நடைபெறுவதாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்களும், தலைவர், துணை தலைவர் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். கூட்டத்திற்கான அஜண்டா வழங்கப்பட்டது. ஒருசில கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். திடீரென கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்தனர். இதனால், அடுத்த கூட்டத்திற்கான தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழுவில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக-7, அதிமுக -6, பாமக -3, தேமுதிக-1, விசிக-1 உள்ளிட்ட கட்சியினர் உறுப்பினர்களாக உள்ளனர். 15வது நிதி குழுவின் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது நிதி ₹2.48 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கவுன்சிலருக்கு ₹12 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் 18 பேருக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டது. திட்டப்பணிகள் செய்ய அரசு ஆணை வழங்கவில்லை. இதனால் அனைத்து கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தோம்,’ என்றார்.