ஆண்டிமடம், ஜூலை 29: அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூழாங்கற்களை லாரிகளில் கடத்தி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரியலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்ததில் கூழாங்கற்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிமடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். லாரிகளின் டிரைவர்களான விழுப்புரம் மாவட்டம் ராதாகிருஷ்ணன்(30) மற்றும் விருத்தாசலம் அருகே நெடியப்பட்டு கிராமம் ராஜ்குமார்(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.