பள்ளிப்பட்டு: சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சாலை அமைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு 24 சதவீதம் வட்டியுடன் ரூ.12.28 லட்சம் அபராத தொகை செலுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஜான்சி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் சாலை அமைக்க அதே பகுதியில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து பயன்படுத்தியாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அப்போதைய திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு நடத்தி கிராவல் மண் அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு, ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.12.28 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இருப்பினும் அபராத தொகையை செலுத்த ஊராட்சி மன்றத் தலைவர் முன்வராத நிலையில், மாவட்ட கலெக்டர் நடவடிக்கையாக ரூ.12.28 லட்சம் அபராத தொகையை 24 சதவீதம் வட்டியுடன் செலுத்த உத்தரவிட்டிருந்தார். கலெக்டர் உத்தரவை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து வட்டியுடன் அபராத தொகை செலுத்த உத்தரவிட்டது.