காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று ரூ.2.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் நேற்று மனுக்கள் பெறப்பட்டது. இதற்கென்று, தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.
மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட 361 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை இன்று மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மதிப்பிலான 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கு மானிய தொகையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில், 10 மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு, மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன் காசோலைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், கூட்டுறவு துறை சார்பில், 7 மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு ரூ.88 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், சிறுகாவேரிபாக்கம் களஞ்சியம் ஜீவிதம் 10 கே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் வாலாஜாபாத் நெய்தல் ஜீவிதம் 10 கே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மானிய நிதியினையும், மாவட்ட தொழில் மையம் சார்பில், 4 பயனாளிகளுக்கு மானிய தொகை கடன்களையும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.2.56 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர்கள் மலர்க்கொடி குமார் (காஞ்சிபுரம்), தேவேந்திரன் (வாலாஜாபாத்), எஸ்.டி.கருணாநிதி (ஸ்ரீபெரும்புதூர்), மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.