புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நீர்ப்பாசன வசதி குறித்து 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் ஞானசிவம் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராசேந்திரன் அங்கு கள ஆய்வு செய்தனர். பாலத்தில் இருந்த கல்வெட்டை படியெடுத்தனர். இதில் திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக (கணக்கப்பிள்ளை) இருந்த கண்ணப்ப தம்பிரான் என்பாரின் உத்தரவுபடி பாலம் கட்டப்பட்டது என பதிவு செய்திருந்தது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது: திருவாவடுதுறை ஆதீனத்தின் 17-வது பட்டமாக இருந்த அம்பலவாண தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 ஆகஸ்ட் மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக் கொண்டு வந்துள்ளார்.மேலும் கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட கட்டுமானமாக இருக்கிறது. இந்த கல்வெட்டு மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகல பலகைக்கல்லில், 14 வரியில் பொறிக்கப்பட்டுள்ளது.