சென்னை: பணம் பட்டுவாடா தொடர்பாக வந்த புகாரையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்களின் வீடுகளில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிகளவில் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்து பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சென்னை ஏழுகிணறு சக்கரா தெருவை சேர்ந்த தொழிலதிபர் இன்துராம் வீடு, ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்து வரும் தொழிலதிபர் வீடு, கொண்டிதோப்பில் தொழிலதிபர் வீடு, புரசைவாக்கம் மற்றும் கொரட்டூர், விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.
அதேபோல், திருச்சி, செய்யாறு, தென்காசி, சேலம் ஆகிய இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளிலும் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மொத்தமாக இறக்குமதி செய்து வரும் தொழிலதிபர்கள் வீடுகளில் நடந்த சோதனை இரவு வரை நீடித்தது. அதில் விருகம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டில் மட்டும் கணக்கில் வராத ரூ.2.60 கோடி ரொக்கம், திருச்சி தொழிலதிபர் வீட்டில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.50 லட்சம் ரொக்கம், சேலத்தில் நடந்த சோதனையில் ரூ.20 லட்சம், தென்காசி, செய்யாறு பகுதிகளில் இருந்து கணக்கில் வராத பணம் என மொத்தம் ரூ.4 கோடி ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.