சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீராணம் ஏரி நீரில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக அளவில் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வீராணம் ஏரியில் உள்ள தண்ணீரில் முதல் வகை நச்சு லிட்டருக்கு 17.72 மைக்ரோகிராம் அளவுக்கும், இரண்டாம் வகை நச்சு 19.38 மைக்ரோ கிராம் அளவுக்கும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை மிகவும் ஆபத்தான அளவு எனக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவுகள், மேட்டூரில் சேரும் வேதிப்பொருள் கழிவுகள், நொய்யலில் சங்கமமாகும் சாயப்பட்டறை கழிவுகள், காவிரி பாசன மாவட்டங்களில் இணையும் உரக்கழிவுகள் ஆகியவை தான் வீராணம் ஏரி நீரின் சீரழிவுக்கு காரணம் ஆகும். இவற்றைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. வீராணம் ஏரி பாசன ஆதாரமாக மட்டுமின்றி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்வதால், அதில் கலந்துள்ள நச்சுகளை அழிக்க வேண்டியது முதன்மைக் கடமையாகும். அதற்காக காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான நடந்தாய் வாழி காவேரி என்ற பெயரிலான திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.