பெங்களூரு: பெங்களூருவில் ஏழை விவசாயி ஒருவரை மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளது. பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் வந்த விவசாயி பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார். மேலும் அவரிடம் கடுமையாக பேசி அங்கிருந்து வெளியேறக்கூறி எச்சரிக்கிறார்.
பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத பாதுகாப்பு மேற்பார்வையாளரை சக பயணிகள் கண்டித்ததால், அந்த விவசாயிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் அந்த முதியவரை மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு வழியாக அந்த முதியவரும் மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்கிறார். பின்னர் அவர் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
இந்த நிகழ்வுகளை அங்கிருந்த பயணி ஒருவர் விடியோ எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், பெங்களூரு மெட்ரோவில் விஐபிகள் மட்டும்தான் பயணிக்க வேண்டுமா? மெட்ரோவில் பயணிக்க ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று பலர் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிலையில், விவசாயியை பயணம் மேற்கொள்ள இடையூறு செய்த பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணிநீக்கம் செய்துள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.