திண்டிவனம் : திண்டிவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம், பைக் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கனூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் கலைஞர் பித்தன் (41). இவர் நேற்று அதிகாலை ஜக்காம்பேட்டை தனியார் திருமணம் மண்டபம் அருகே உள்ள டீக்கடையில், டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மருதமலை (25) மற்றும் எரும்பு (எ) ரமேஷ் குமார் (25) ஆகிய இருவரும் கலைஞர் பித்தனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த 1,500 ரூபாய் பணம் மற்றும் பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அங்கிருந்து அதிவேகமாக சென்றுள்ளனர்.
இதுகுறித்து கலைஞர் பித்தன் மயிலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு, பின்னர் சிங்கனூர் கிராமத்துக்கு இருவரையும் தேடி சென்றுள்ளனர். அப்போது சிங்கனூர் செல்லும் வழியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், அப்பகுதியில் இருந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், நேற்று முன்தினம் சிங்கனூரில் ஊராட்சி மன்ற துணைத்தலைவியின் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து பைக், 1,500 ரூபாய் பணம், அரை கிலோ வெள்ளி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.