திண்டுக்கல்: திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.16 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 6 எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக கணக்கு தணிக்கை குழு கொடுத்த அறிக்கையின்படி, கடந்த அதிமுக ஆட்சியில் 2016 – 17ம் ஆண்டு திண்டுக்கல் இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ.16 கோடிக்கு கூடுதலாக மருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காலக்கட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் ஏன் கூடுதலாக மருந்து வாங்கப்பட்டது என முறையாக காரணம் தெரிவிக்கப்படவில்லை. ரூ.16 கோடிக்கு மருந்து வாங்கியதற்கு கணக்கும் காட்டப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதா என துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. மருந்து வாங்கியபோது பணியில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியின் பென்ஷன் உள்ளிட்ட பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளோம்’’ என்றார்.