கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் கூட வெல்வது கடினம் என்று மம்தா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் 42 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என்று திரிணாமுல் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா தெரிவித்தார். இதனால் இருகட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மம்தா கூறுகையில்,’ மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 300 இடங்களில் பாஜவுக்கு எதிர்ப்பாக நாடு முழுவதும்போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இப்போது முஸ்லிம் வாக்காளர்களை பிரிக்க எங்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
அவர்கள் 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் தற்போது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்தான். நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருந்தோம். அவர்கள் வெற்றி பெற்று இருந்த இரண்டு இடங்களை அவர்களுக்கு வழங்கினோம். அதை நிராகரித்து விட்டார்கள். இப்போது அவர்கள் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடட்டும். அவர்களுக்கும், எங்களுக்கு இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.
உங்களுக்கு தைரியம் இருந்தால், உ.பி., குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜவை தோற்கடிக்க வேண்டும்’ என்றார்.