Monday, May 20, 2024
Home » வசனம், நடிப்பு மூலம் திரைத்துறையில் கலைஞரும் சிவாஜியும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்தனர்: நடிகர் பிரபு பேச்சு

வசனம், நடிப்பு மூலம் திரைத்துறையில் கலைஞரும் சிவாஜியும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்தனர்: நடிகர் பிரபு பேச்சு

by Suresh

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு மேற்கு பகுதி திமுக சார்பில், ‘’திரைவானின் விடிவெள்ளி திராவிட தமிழ் பள்ளி’’ என்கின்ற பெயரில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சட்டத்துறை துணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சந்துரு தலைமை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் நடிகர் பிரபு பேசியதாவது; கொட்டும் மழையில் பொதுமக்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தை கேட்க காரணம் கலைஞர் மீது கொண்ட பிரியமே. எனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞர் ஆகிய இருவருக்கும் இடையே நட்பு ரீதியான ஒற்றுமை இருந்தது. எனது தந்தை நடித்தால் அந்த திரைப்படத்தின் திரைக்கதை வசனகர்த்தாவாக கலைஞரே இருப்பார். என்னுடன் எப்பொழுதும் மிகவும் பாசமாக இருக்கக்கூடியவர் கலைஞர். அவரின் வசனம் என்பது மிகவும் அருமையான ஒன்று. அதற்கு உதாரணமே பராசக்தி, காவேரி போன்ற திரைப்படங்களில் வசனங்களை மக்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். திரைத் துறையில் கலைஞரும் எனது அப்பா சிவாஜியும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டனர்.

நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட எனது தந்தையின் திருவுருவ சிலை அகற்றப்பட்ட பின்பு அதே இடத்தில் அந்த சிலையை நிறுவிய முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞரின் புகழை பறைசாற்றும் வகையில் தொடர்ந்து அவருக்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை மிகவும் பெருமையாக நினைக்கின்றேன். அதுவும் கொட்டும் மழையிலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் எங்களது பேச்சை ரசித்து கேட்பதும் என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படிப்பட்ட அன்பை கழக சகோதர, சகோதரிகளிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும். இவ்வாறு பேசினார்.

இந்த கூட்டத்தில், கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராசன். மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சபரிநாத், கொளத்தூர் கிழக்கு பகுதி வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், வழக்கறிஞர் துரைக்கண்ணன். மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

eighteen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi