சென்னை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதின தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் உடந்தையாக இருந்ததாக செம்பனார்கோவிலை சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கொடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொடியரசு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்பு இருப்பதாகவும், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ் செல்வி, விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் ஜாமீன் வழங்க மறுத்து கொடியரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் கல்வி நிறுவன தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
previous post