திட்டக்குடி: கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தியடைந்த டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன்(34). இவருக்கு திருமணம் ஆகி அன்பரசி என்ற மனைவியும், 10 வயதில், 8 வயதில் 2 மகன்களும் உள்ளனர். பிறந்து 10 நாட்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது. கோபிகிருஷ்ணன் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். டோனிக்காக தனது சொந்த வீட்டையே சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிற வர்ணம் பூசியும், டோனியின் படங்களை வரைந்தும் வைத்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த ேகாபிகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்து, அங்கு ஆன்லைன் பிசினஸ் செய்து வந்ததாகவும், இதற்காக உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பிசினசில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காணும் பொங்கலை முன்னிட்டு ஊரில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில், கோபிகிருஷ்ணனும் கலந்து கொண்டு விளையாட்டை நடத்தி வந்தார். அப்போது, ஏற்கனவே கடன் கொடுத்த ஒரு தரப்பினர், கொடுத்த பணத்தை கோபிகிருஷ்ணனிடம் திரும்பக்கேட்டு தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபிகிருஷ்ணன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்து பணம் கொடுத்தவர்கள் என்னை தாக்கியதாக மனைவிடம் கூறினாராம். பின் இருவரும் படுத்து தூங்கி விட்டனர்.
அதிகாலை 3.30 மணி அளவில் கோபிகிருஷ்ணனின் மனைவி எழுந்து பார்த்தபோது, கணவரை காணாமல் இருப்பதை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அறை திறந்திருந்ததால் அங்கு சென்று பார்த்த போது, கோபிகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.