புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று தமிழக மீனவர் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இலங்கை கடற்படையால் கடந்த 28 நாட்களில் மட்டும் 88 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, மக்களவையில் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, தமிழக மீனவர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி திமுக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அவை கூடியதும், ராமர் கோயில் கட்டப்பட்டது மற்றும் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை குறித்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள் தமிழக மீனவர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், அதுதொடர்பான நோட்டீசுக்கு அனுமதி வழங்கவும் கோஷமிட்டனர்.
இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால், அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதே போல, மாநிலங்களவையில் வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, ‘‘ சென்னை வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய பாஜ அரசு ஒரு ரூபாய் கூட நிதி தராமல் உள்ளது’’ என்றார். மேலும், ஒன்றிய பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக திருச்சி சிவா கூறும் முன்பாகவே அவர் பேசுவது கேட்காமல் இருக்க மைக் அணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.