தாம்பரம்: குரோம்பேட்டை, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்வசேகர் (48). இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19), கடந்த 2 ஆண்டுகளாக நீட்தேர்வு எழுதியும், அரசு ஒதுக்கீட்டில் சீட்டு கிடைக்காததால், தற்கொலை செய்து கொண்டார். துக்கத்தில், அவரது தந்தை செல்வசேகரும் மறுநாள் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில், குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட துணை செயலாளர் குரோம்பேட்டை நாசர், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், மாமன்ற உறுப்பினர்கள் புசீரா பானு நாசர், விஜயலட்சுமி, இறந்த மாணவன் ஜெகதீஸ்வரனின் நண்பன் மருத்துவ கல்லூரி மாணவன் பயாஸ்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.