ஆலந்தூர்: புழுதிவாக்கம் எம்.ஆர்.டிஸ் சாலை வழியாக செல்லும் வீராங்கல் ஓடையின் குறுக்கே 3 வணிக கட்டுமான நிறுவனத்தினர், வணிக நோக்கத்துடன் நீர்வளத்துறையின் அனுமதி பெறாமல் 3 பாலங்களை கட்டி இருந்தனர். இதில், ஒரு கட்டிடத்தின் முன்பு சுமார் 50 அடி நீளம் 15 அடி அகலமும், மற்றொன்றில் 30 அடி நீளம், 12 அடி அகலத்தில் ஒரு பாலமும், இன்னொன்றில் 20 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட 3 கான்கிரீட் பாலமும் கட்டியிருந்தனர்.
இந்த பாலங்கள் நீர்வழிப்பாதைக்கு இடையூறாக இருப்பதாக நீர்வளத்துறையினர் கருதியதால் பாலங்களை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நீர் ஆதார பிரிவு துறை செயற்பொறியாளர் வெங்கட், உதவி பொறியாளர் மகேந்திர குமார், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு முன்னிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் 3 பாலங்கள் பொக்லைன் உதவியுடன் அடித்து அகற்றப்பட்டது.