Saturday, May 11, 2024
Home » ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட கோரிக்கை

ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட கோரிக்கை

by Suresh

ஊத்துக்கோட்டை: ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டித்தரவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மங்களம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலை வழியாக ஆரணிக்கு சென்று பின் அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் சென்றுவருவார்கள்.

இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியது. மேலும் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்படும் போது, மேலும் நந்தனம் மலைப் பகுதியில் இருந்து வரும் மழை நீர் ஓடை வழியாக வந்து ஆரணி ஆற்றில் கலக்கும். இந்த தண்ணீர் சுருட்டப்பள்ளி அணைக்கட்டிற்கு வந்து தேக்கிவைக்கப்பட்டு அதன் உபரிநீர் வெளியேறி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், மங்களம், ஆரணி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும்.

இதனால் மங்களம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள செம்மண் சாலையும் மூழ்கும்நிலை ஏற்படும். மேலும் மங்களம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெரியபாளையம், ஆரணி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், மக்களும் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலையை கடந்து செல்ல முடியாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள். இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுவார்கள். மேலும் மக்களம் கிராமத்திற்கு தரைப்பாலம் அமைக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆற்றில் தண்ணீர் வரும்போது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க எங்களால் சென்றுவர முடியவில்லை. மேலும் எங்கள் பிள்ளைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்வது எங்களுக்கு மிகவும் அச்சமாகவே உள்ளது. ஒவ்வொரு முறையும் எங்களிடம் ஓட்டு கேட்டு வரும் எம்பி, எம்எல்ஏ வேட்பாளர்களிடம் தரைப்பாலம் வேண்டும் என கோரிக்கை மனு தருகிறோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த முறையாவது மங்களம் கிராமத்திற்கு ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கூறினர்.

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi