புதுடெல்லி: டெல்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக ராணுவ தம்பதிகள் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்ள கடமை பாதையில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளாக உள்ள மேஜர் ஜெர்ரி பிளைஸ், அவரது மனைவியான கேப்டன் சுப்ரீதா ஆகிய இருவரும் வெவ்வேறு படைபிரிவுகளின் சார்பில் பங்கேற்கின்றனர். மேஜர் ஜெர்ரி நீலகிரி மாவட்டம், வெல்லிங்டனை சேர்ந்த மேஜர் ஜெர்ரி பெங்களூரு ஜெயின் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். அவரது மனைவியான கேப்டன் சுப்ரீதா மைசூரை சேர்ந்தவர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்காக நடந்து வரும் ஒத்திகையில் ஈடுபடுவதற்காக கணவன், மனைவியும் டெல்லி வந்துள்ளனர்.
இதுகுறித்து சுப்ரீதா கூறுகையில்,‘‘ நான் ராணுவ போலீஸ் படை பிரிவில் பணியாற்றுகிறேன். எனது கணவர் மெட்ராஸ் படைபிரிவில் பணியாற்றுகிறார். நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுகிறோம். அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக தற்போது டெல்லி வந்துள்ளோம்’’ என்றார். மேஜர் ஜெர்ரி கூறுகையில் ‘‘ குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கணவன், மனைவி ஆகியோர் பங்கேற்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை’’ என்றார்.