டெல்லி; டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில், ஜாமின் மீதான வாதங்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 22ம் தேதி கேட்டு உத்தரவை மே 2ம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் மீதான உத்தரவை 6ம் தேதி பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தது. இதனிடையே 2 வழக்குகளில் ஜாமின் மனுக்களை நேற்று நிராகரித்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து ரோஸ் அவன்யூ கோர்ட்டில் கவிதா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும், கவிதாவின் மீது ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐ வழக்கில் கவிதாவின் நீதிமன்ற காவலை மே 14ம் தேதி வரையும், அமலாக்கத்துறை காவல் வழக்கில் நீதிமன்ற காவலை மே 20 வரையும் நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வழக்கு அநீதியானது என்றும் இதை அனைவரும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.