புதுடெல்லி: டெல்லி வீட்டிற்கு வரவழைத்து இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பினர். அந்த 7 சம்மன்களையும் அவர் புறக்கணித்தார். தொடர்ந்து மீண்டும் அவருக்கு அனுப்பப்பட்ட 8வது சம்மனை ஏற்றுக்கொண்ட ஹேமந்த் சோரன்ல ஜன. 20ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏழு மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்பு, 9வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பட்டதையடுத்து, அதிகமான பணிகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று ஹேமந்த் பதில் அனுப்பினார். ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜனவரி 29 முதல் 31ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதி, நேரம் மற்றும் இடத்தினை தாங்களே குறிப்பிட்டு சொல்லுமாறு கூறி ஹேமந்த் சோரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் அவசரமாக ெடல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவரது வீட்டில் ஹேமந்த் சோரன் தங்கியிருந்த நிலையில், அங்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நில மோசடியில் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பலமணி நேரம் விசாரணை நடத்தினர். அதனால் ஹேமந்த் சோரன் வீட்டின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.