Sunday, May 12, 2024
Home » டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கியது: எல்லைகளில் போலீஸ் குவிப்பு

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கியது: எல்லைகளில் போலீஸ் குவிப்பு

by Karthik Yash

புதுடெல்லி: டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் தொடங்கினர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் அல்லாதது) ஆகிய விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி ரயில், பஸ் மூலமாக வருமாறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து டெல்லி எல்லைகளில் மீண்டும் பாதுகாப்பு நேற்று பலப்படுத்தப்பட்டது. டெல்லி-அரியானாவின் சிங்கு எல்லையிலும், டெல்லி-நொய்டா எல்லையிலும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் மற்றும் நகரின் பிற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து சாலைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில்கள், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தில் விவசாயிகள் வருவார்கள் என்பதால் ரயில், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியிருப்பதால் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாங்கள் எந்த எல்லையையும் அல்லது சாலையயும் மூடவில்லை. தொடர்ந்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகிறோம். டெல்லியில் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எங்கும் எந்தக் கூட்டத்தையும் கூட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை மீறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்றனர். இதற்கான தீவிர பாதுகாப்பு, சோதனை காரணமாக சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, விவசாயிகள் வரும் 10ம் தேதி நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

13 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi