புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்ததாக இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த டேனிஷ் அன்சாரி, அப்தாப் ஆலம், இம்ரான் கான் மற்றும் ஒபைத்-உர்-ரகுமான் ஆகிய 4 பேரை கடந்த 2012ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிபதி ஷைலேந்தர் மாலிக் கடந்த 10ம் தேதி தீர்ப்பளித்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தார். ‘நான்கு பேரும் தங்களின் குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையில், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே அவர்கள் சிறையில் கழித்த காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும்,’ என நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளிகள் 4 பேரும் கடந்த 2013 முதல் நீதிமன்ற காவலில் சிறையில் இருப்பதால், இந்த தீர்ப்பு அவர்கள் விடுதலை அடைய வழிவகுத்துள்ளது.