அரியலூர்: டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக அரியலூரில் அருகே இன்று 2 விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாதிபதி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்க சண்முகசுந்தரம்(45), வேலுமணி(45). விவசாயிகள். இவர்கள் இருவரும் இன்று காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியதை கண்டித்தும், போலீஸ் தாக்கியதில் ஒரு விவசாயி உயிரிழந்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்து வந்த திருமானூர் போலீசார் டவரில் 75 அடி உயரத்தில் நின்ற இருவரையும் கீழே இறங்கும்படி மைக் மூலம் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் இறங்கி வர மறுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள் கீழே இறங்கி வந்தனர்.