புதுடெல்லி: டெல்லி, அரியானா, உத்தரபிரதேசத்தில் 30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனின் குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், அவனுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படும். டெல்லியின் அவுட்டர் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு இரண்டரை வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலம் படவுன் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் குமார் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக பல சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். குற்றவாளி ரவீந்தர் குமார் மீது கடத்தல், பலாத்காரம், கொலை போன்ற 38 வழக்குகள் உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரவீந்தர் குமார், வறுமையால் வாடும் சிறுமிகளை மட்டுமே குறிவைத்து கடத்தி சென்றுள்ளார். ஏனெனில் அந்த சிறுமிகளின் பெற்றோர்கள், தங்களது குழந்தை காணாமல் போனால் புகார்களை அளிக்க முன்வருவதில்லை என்பதால், அவர்களை குறிவைத்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு டெல்லியின் புறநகரில் இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். அதன்பின் தொடர்ந்து 30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் உடலை, அந்தந்த பகுதியில் உள்ளா காட்டில் வீசிவிட்டு சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட ரவீந்தர் குமார் மீதான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. டெல்லி அவுட்டர் பகுதி சிறுமி கொலை வழக்கு ரோகினி கோர்ட்டில் நடந்தது. அந்த வழக்கில், ரவீந்தர் குமாரை குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தண்டனை விபரங்களை நீதிமன்றம் விரைவில் வெளியிடும்’ என்று தெரிவித்தனர்.