புதுடெல்லி: மக்களவை தேர்தலில் டெல்லியில் 6 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ள ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு 1 இடம் மட்டும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே டெல்லி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பொது செயலாளர் சந்தீப் பதக், “ஜனவரி 8, 12 தேதிகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் டெல்லி தொகுதி பங்கீடு பற்றி நடந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒருமாதமாக காத்திருந்தும் காங்கிரசிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளில் 6ல் ஆம் ஆத்மி போட்டியிடும். காங்கிரசுக்கு 1 தொகுதி ஒதுக்கப்படும்.
டெல்லியை பொறுத்தவரை மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒருஇடம் கூட வெற்றி பெறவில்லை. டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் 250 இடங்களில் 9 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. வெற்றி, தகுதி அடிப்படையில் பார்த்தால் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தர முடியாது. ஆனால் கூட்டணி தர்மத்துக்காக ஒரு இடம் தருகிறோம்” என்று கூறினார். இது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்த் சிங் லவ்லி கூறியதாவது, “நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட மிகவும் தயாராக உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தொகுதி பங்கீடு பற்றி செய்தியாளர் சந்திப்பில் முடிவு செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
* தெற்கு கோவா, குஜராத் ஆம் ஆத்மி வேட்பாளர்கள்
மக்களவை தேர்தலில் தெற்கு கோவாவில் வென்சி விகாசும், குஜராத்தின் பரூச் தொகுதியில் சைதர் வஸ்வா, பாவ்நகர் தொகுதியில் உமேஷ்பாய் மக்வானா ஆகியோர் ஆம் ஆத்மி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
* 7 தொகுதிகளிலும் பாஜ வெற்றி பெறும்
டெல்லி நகர பாஜ பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லியில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் 7 தொகுதிகளிலும் பாஜ பெரும்பான்மை வெற்றி பெறும்” என்றார்.