திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கவிதா ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை முன் ஆஜரானார். மேலும் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளது. மறுபுறம், அமலாக்கத்துறை பல முறை கவிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அவர் விசாரணைக்கு செல்லவில்லை. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை, வருமானத்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று மதியம் முதல் சோதனை நடத்தினர்.அப்போது கவிதாவின் 2 செல்போன்கள் மற்றும் வீட்டில் இருந்த ஊழியர்களின் செல்போன்கள் என மொத்தம் 16 போன்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை தொடர்ந்து அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் கவிதாவை கைது செய்தனர். மேலும் அவரை டெல்லி கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.