புதுடெல்லி: யுஜிசி பணி நியமனங்களில் இடஒதுக்கீடு நீக்கம் தொடர்பான வரைவு விதிகள் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் காலியாக இருக்கும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளின் பணியிடங்களை இட ஒதுக்கீடு முறையில் நிரப்புவதற்கு பொதுவான தடை இருக்கிறது.
இதனால் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, அந்தப் பணியிடத்தை நிரப்ப போதுமான விண்ணப்பங்களோ, தகுதியான ஆட்களோ கிடைக்காத பட்சத்தில், அந்தப் பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்யலாம் என அறிவித்து இருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் யுஜிசியில் இடஒதுக்கீடு நீக்கத்தை பரிந்துரைக்கும் வரைவு வழிகாட்டுதல்களை இணையதளத்தில் இருந்து நேற்று நீக்கியுள்ளது. இருப்பினும், யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில்,’ கருத்துக்களை சமர்ப்பிக்கும் காலம் முடிந்துவிட்டதால், இணையதளத்தில் இருந்து வழிகாட்டுதல்கள் அகற்றப்பட்டுள்ளன’ என்றார்.