சென்னை: டிஎன்பிஎஸ்சியால், ‘2022ம் ஆண்டு உத்தேச அட்டவணையில் அறிவிக்கப்பட்ட உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பு’ வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும், தேர்வுக்கான கால அட்டவணையை முன்னரே வெளியிட்டு வருகிறது. இது, தேர்வுகளுக்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, 2022ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில், தமிழ்நாடு மாநில நீதித்துறையில் 245 உரிமையியல் நீதிபதி பதவிகள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவித்தது. அதாவது, மே மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும், ஜூலையில் முதல்நிலை தேர்வும், இதன் முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்படும்.
ஜனவரி 2023ம் ஆண்டு மெயின் தேர்வும், அதன் ரிசல்ட் மார்ச் மாதமும் நடத்தப்படும். ஏப்ரலில், நேர்முக தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு இறுதி வரையிலும் உரிமையியல் நீதிபதி தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஓராண்டு கால அட்டவணை கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிலும் உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வு எழுத தயாராக இருந்தவர்கள் காத்திருந்தனர். ஆனால், 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் ஓராண்டு கால அட்டவணையில் உரிமையியல் நீதிபதி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வுக்காக தயாராகி வந்த லட்சக்கணக்கான சட்டம் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து டிஎன்பிஎஸ்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட ஒருவருக்கு போட்டி தேர்வுகளில் மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தல் தொடர்பாக கருத்துரு அரசிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படி தெரிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரையில் உரிமையியல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், சட்டப்படிப்பு படித்து உரிய முறையில் வழக்கறிஞராகவும் பதிவு செய்துள்ளவர்கள் ெபரும் கலக்கத்தில் உள்ளனர். எனவே, உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட தமிழக அரசும், நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க சட்டப்படிப்பு முடித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூறுகையில், “புதுச்சேரியில் 16 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கேரள மாநிலத்தில் 56 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு வருகிற மே மாதம் 14ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சியால் கடந்த ஆண்டு ஓராண்டு கால அட்டவணையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் அரசு வேலைகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்” என்றனர்.