திருவள்ளூர்: தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வாரமாக கொண்டாட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கணினி தமிழ் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க வலியுறுத்தி வணிக சங்க தலைவர்கள், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையிலான விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன. தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் அனைவரும் ஆட்சி மொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.