திருக்கனூர்: புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் காந்திநகரை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கவிப்பிரியா. தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கவிப்பிரியாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சூடோமோனாஸ் என்ற ஒருவகை பாக்டீரிய தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நான்கு நாட்கள் கழித்து ஏப்ரல் 25ம் தேதி இறந்தது. தொடர்ந்து மணிகண்டன், தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் குழந்தையின் உடலை ஆராய்ச்சிக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இதனையேற்றுக்கொண்ட ஜிம்பர் மருத்துவமனை, குழந்தையின் உடலை, உடற்கூறியல் துறை மருத்துவர்களிடம் வழங்குமாறு தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினரிடம் குழந்தையின் உடலை மணிகண்டன் ஒப்படைத்தார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ‘சூடோமோனாஸ் பாக்டீரிய குறித்து விரிவாக ஆய்வு நடத்துவதன் மூலம், பிற்காலத்தில் இது போன்றுபாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எளிதாக இருக்கும். எனவே மருத்துவ ஆராய்சிக்காக எனது குழந்தையின் உடலை தானமாக வழங்கினோம், என்றார்.