முன்பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதுதான் தற்போது எங்கும் வைரலாக சுற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு பணிக்காக மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர் அங்கு சென்றார். பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மதுபோதையில் இருந்த ஜானக்ராம் என்பவர் பெண் போலீஸ் ஒருவரை பார்த்து ‘டார்லிங்’ என்று அழைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கும் கீழமை நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் ஜானக் ராமுக்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனையும். ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஜானக் ராம் மனு தாக்கல் செய்தார். மதுபோதையில் ஒரு ஆண் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. மேலும், புண்படுத்தும் வார்த்தையாகும். சமூகம் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி முன்பின் தெரியாத பெண்களை அழைப்பதற்கு அனுமதிக்காது.
எனவே, முன்பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என்று அழைப்பது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354A (ஒரு பெண்ணின் அடக்கத்தை மீறுதல்) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மனுதாரர் நிதானமான நிலையில் இருந்தால், குற்றத்தின் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கும்” என்று நீதிபதி கூறியிருப்பதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.