திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் 25 இருளர் குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நீர்நிலை பகுதியில் இருளர் இன மக்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருவதால் இவர்களது, குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க முடியாத நிலை உள்ளது. பட்டா இல்லாததால் தொகுப்பு வீடு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை என்ற பகுதியில் மாற்று இடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே தாங்கள் வசித்து வரும் அதே விட்டிலாபுரம் பகுதியில் மயானம் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருளர் மக்கள் நேற்று திடீரென குடிசைகள் அமைத்தனர். இது குறித்து, தகவல் அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அரசு நிலத்தில் அனுமதியின்றி குடிசைகள் அமைக்கக்கூடாது. எனவே, உடனடியாக குடிசைகளை அகற்றுங்கள் என தெரிவித்தார். இதனிடையே, இருளர் மக்கள் தங்களுக்கு விட்டிலாபுரம் பகுதியிலேயே மாற்று இடம் வழங்கி, பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இருளர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், விட்டிலாபுரம்-நெரும்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இருளர் மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இருளர்களின் இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.