ஊத்துக்கோட்டை: வெங்கல் குப்பம் கிராமத்தில், சேதமடைந்த பயணியர் நிழற்குடை, குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டுமென கிராம மக்கள் கோருகின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் . இக்கிராமத்தின் மைய பகுதியில் கடந்த 40 வருடத்திற்கு முன்பு பயணியர் நிழற்குடை மற்றும் இதன் அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. வெங்கல் குப்பம் பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இங்கிருந்து கன்னிகைப்பேர், பெரியபாளையம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த பயணியர் நிழற்குடை செடி கொடிகள் படர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுபோல் குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை, குடிநீர் தொட்டியை புதிதாக அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஏற்ற அதிகாரிகள், அதேபகுதியில் புதிய குடிநீர் தொட்டி கட்டி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், ‘‘வெங்கல் குப்பம் கிராமத்தில் 40 வருடங்களுக்கு முன்பு பயணியர் பஸ் நிழற்குடை, இதனருகில் குடிநீர்தொட்டியும் கட்டினர் தற்போது, செடி கொடிகள் படர்ந்து பயணியர் நிழற்குடையின் கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குடிநீர் தொட்டியும் சேதமடைந்துள்ளது. இவை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பயணியர் நிழற்குடை ,பழைய குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். புதியதாக பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும். ’’ என கோருவதாக கூறினர்.