திருவண்ணாமலை: சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.100 குறைத்து இருப்பது தேர்தல் நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து காந்தி சிலை சந்திப்பில் திமுக இளைஞரணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்; திருவண்ணாமலை தொகுதியில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 லட்சம் மாணவிகள் பலனடைந்துள்ளனர். மோடி ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. கட்டணமில்லா பயணத்தால் பேருந்தில் 460 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவுத் திட்டத்தால் 18 லட்சம் குழந்தைகள் பலனடைந்து வருகின்றனர். சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.100 குறைத்து இருப்பது தேர்தல் நாடகம்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ரூ.500 உயர்த்தி விடுவார்கள். திருவண்ணாமலைக்காக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டது. பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை பணி தொடர வேண்டும். சி.என்.அண்ணாதுரையை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.