திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த வாயலூர் சத்திரம் காலனியை சேர்ந்தவர் கலா (52). அரசுப்பள்ளி சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று மாலை சமையல் காஸ் சிலிண்டரில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக இவரது குடிசை வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அந்த நேரத்தில் காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்தது.
இந்நிலையில், அருகிலிருந்த காயலான் கடைக்காரரான செல்வராஜ் (50). என்பவரது ஓலைக்குடிசையிலும் தீ பரவி அவரது வீடு முழுவதும் எரிந்தது. இரண்டு வீட்டில் இருந்த 2 காஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவலறிந்த திருக்கழுக்குன்றம் தீயணைப்பு படையினர் வருவதற்குள் இரு வீடுகளும் முழுமையான எரிந்துவிட்டது. மேற்கண்ட 2 வீடுகளிலிருந்த டிவி, பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.