புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, கோவாவில் இருந்து மேற்கு-தென்மேற்கே 950 கிமீ தொலைவிலும், மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 1,100 கிமீ தொலைவிலும் குஜராத்தின் போர்பந்தருக்கு தெற்கே 1,190 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து, கிழக்கு-மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடலில் புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை தீவிர புயலாகவும், நாளை மறுதினம் மாலையில் மிக தீவிரமான புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போதைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தை வெகுவாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.