புதுடெல்லி: நாட்டில் 4 ஆண்டுகளில் விளைநிலங்களில் இருந்த 50லட்சத்துக்கும் மேற்பட்ட மிகப்பெரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. டென்மார்க்கின் கோபென்ஹெஜென் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்தியாவின் விளைநிலங்களில் இருக்கும் மரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் காடு அல்லாத மரங்களை ஏஐ அடிப்படையிலான ஆழமான கற்றல் மாதிரிகளை பயன்படுத்தி கண்டறிந்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் மரத்தின் உச்சியை கண்காணிப்பதன் மூலமாக அவற்றின் மாற்றங்களை பகுப்பாய்வு செய்துவந்தனர்.
தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் சுமார் 60கோடி மரங்களை குழு கண்டறிந்து வரைபடமாக்கி 10 ஆண்டுகளாக அவற்றை கண்காணித்து வந்தது. இந்த குழு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘‘2010-2011ல் வரைபடமாக்கப்பட்ட சுமார் 96சதுர மீட்டர் உச்சியை கொண்ட 11 சதவீத மரங்கள் 2018ம் ஆண்டில் அகற்றப்பட்டுள்ளது. 2018-2022ம் ஆண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான மிகப்பெரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட சாகுபடி நடைமுறைகள் காரணமாக இந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விளைநிலங்களில் உள்ள மரங்களின் நிழல் பயிர் விளைச்சலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.