நம் முன்னோர் பட்டம் பார்த்து பயிர் செய்யும் சூட்சுமத்தை அறிந்து வைத்து நமக்கு கையளித்துச் சென்றிருக்கிறார்கள். மழைக்காலங்களில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதைப் போல கோடைகாலத்திலும் சில வகை பயிர்களை சாகுபடி செய்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். கோடைக்கேற்ற பயிர்கள் என்றால் அது பயறு வகைப் பயிர்கள்தான். உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, துவரை, கொள்ளு, மொச்சை போன்ற பயிர்களுக்கு அதிக பாசனநீர் தேவைப்படாது என்பதால் இந்தப்பயிர்களைக் கோடைகாலத்திற்கேற்ற பயிர்களாக பகுத்து வைத்திருக்கிறார்கள். இத்தகைய பயிர்களில் மகசூலை அதிகரிக்கவும் சில எளிய வழிகள் இருக்கின்றன. பயறு வகைப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க, முதலில் பருவத்துக்கேற்ற உயர் விளைச்சல் தரும் ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும்.
இது பயிருக்கும் மண்ணுக்கும் நன்மை தருவதோடு, விளைச்சலையும் 30 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கு இது ஒரு நல்ல யுக்தி. பயறு வகைப் பயிர்களை விதைக்கும்போது ஒவ்வொரு செடிகளுக்கும் இடையில் உரிய இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். அதாவது சூரிய ஒளி, நீர், உரம் ஆகியவை நெருக்கடி இல்லாத வகையில் பயிர்களுக்கு போய்ச் சேர வேண்டும். அதேபோல் உரிய காலத்தில் களை நிர்வாகம் மேற்கொள்ளுதல் மிகவும் அவசியம். இல்லையென்றால் தண்ணீர் அனைத்தையும் தேவையற்ற பயிர்களே எடுத்துக்கொள்ளும். சரியான நீர் நிர்வாகம் மேற்கொள்ளப்படுகிறதா? என கவனிக்க வேண்டும். விதைத்தவுடனும் மூன்றாம் நாளும் நீர்ப் பாய்ச்ச வேண்டும், தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒரு முறையும், பூக்கும் பருவத்திலும் காய்ப்பிடிக்கும் பருவத்திலும் தேவையான நீரைக் கொடுப்பது முக்கியம்.
அதேபோல் நிலத்தில் நீர் தேங்கி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயறு வகைகளில் பூக்கள் உதிர்வதைத் தடுக்க ‘பிளோனோபிக்ஸ்’ வளர்ச்சி ஊக்கியைப் பூக்கள் தெரிய ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். விதைத்த 30 மற்றும் 45வது நாளில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 100 லிட்டர் நீரில் கலந்து ஒருநாள் ஊற வைத்து, காலையில் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படுமாறு மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறான பராமரிப்பு முறைகளை மேற்கொண்டால் பயறு வகைகளில் நல்ல மகசூலை ஈட்டலாம்.