சென்னை: வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக் கூடாது என்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுவாக பட்ட பெயர் வைத்து நம்மில் அழைப்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. சில சமயங்களில் அது எல்லை மீறி செல்வதும் உண்டு. இந்நிலையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 28. அதே பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று வந்த ஒருவர், ஜூஸ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல், தான் ரவுடி எனக் கூறி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். பின் கத்தியைக் காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து திருவேற்காடைச் சேர்ந்த ரவுடி குரங்கு சரவணன் என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட சரவணனை குரங்கு என்ற அடைமொழியுடன் குறிப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி லிங்கேஸ்வரன்; பட்டப்பெயர் வைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். உரிய அறிவுறுத்தல்களை வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் தெரிவித்தார். நமது பெயர் நம் அடையாளம் எனக் கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்து குரங்கு என்ற வார்த்தையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.